Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நல்வழிகாட்டுவார் இலஞ்சிக்குமாரர்

நல்வழிகாட்டுவார் இலஞ்சிக்குமாரர்

நல்வழிகாட்டுவார் இலஞ்சிக்குமாரர்

நல்வழிகாட்டுவார் இலஞ்சிக்குமாரர்

ADDED : நவ 24, 2023 09:30 AM


Google News
Latest Tamil News
உங்களது வாழ்வில் ஒளியேற்றி வைக்க காத்திருக்கிறார் தென்காசி இலஞ்சியில் உள்ள குமாரர்சுவாமி.

பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு காசிபர், கபிலர், துர்வாசர் ஆகிய முனிவர்கள் திரிகூடாசலமலையில் இருந்தபடி தத்துவப்பொருளை பற்றி விவாதித்தனர். அப்போது 'உண்மைப்பொருள் யார்' என்ற கேள்வி எழுந்ததது. இதற்கு கபிலர் திருமால் என்றும், காசிபர் பிரம்மன் என்றும், துர்வாசர் உருத்திரன் என்றும் வாதிட்டனர். இந்த குழப்பத்தை தீர்க்கும்படி முருகப்பெருமானிடம் வேண்டினார் துர்வாசர். உடனே முருகன் இளமையாக தோன்றி, 'யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம்' என முத்தொழில்களை செய்பவன் நானே என உணர்த்தினார். பின் உண்மையை அறிந்த முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் இங்கு எழுந்தருளினார்.

மற்றொரு சமயம் சிவபெருமானின் திருமணத்தை பார்க்க முனிவர்கள், தேவர்கள் கைலாயத்திற்கு சென்றனர். இதனால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்தது. இதனைச் சமப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி வந்தார். கூடவே திருக்குற்றாலத்தில் சிவபெருமானை பூஜித்து திருமணமும் நடனக்காட்சியும் பார்க்கும் வரத்தையும் பெற்றார். அதன்படி முனிவர் குற்றாலத்திற்கு வரவே, அங்கு சங்குவடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. இவரோ சிவனடியார். இதனால் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. வருந்தியவர் இலஞ்சி வந்து குமாரர்சுவாமியான முருகனிடம் வேண்டினார். அவரது அருளால் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலேயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார் அகத்தியர். பின் வைணவ வேடத்துடன் குற்றாலம் சென்று ஹரியான பெருமாளை ஹரனான சிவபெருமானாக மாற்றி வணங்கினார். இவ்வாறு அகத்தியருக்கு அருளினார் குமாரர்சுவாமி.

இங்கு குமாரர்சுவாமி இளமைக்கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனம் செய்யப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் 'வரதராஜப்பெருமாள்' என்று திருப்புகழில் சிறப்பிக்கிறார். இவருக்கு இடப்புறம் அகத்தியரால் மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவபெருமான் 'இருவாலுக நாயகராகவும்', அம்பாள் 'இருவாலுக ஈசர்க்கினியாளாகவும்' அருள்புரிகின்றனர். மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது. இங்கு வேண்டி குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

எப்படி செல்வது: தென்காசி - குற்றாலம் சாலையில் 5 கி.மீ.,

விசேஷ நாள்: சித்திரையில் 10 நாள் கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை

நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 04633 - 283 201, 226 400, 223 029

அருகிலுள்ள தலம்: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் 5 கி.மீ., (மனநிம்மதி கிடைக்க...)

நேரம் காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 04633 - 222 373





      Our Apps Available On




      Dinamalar

      Follow us