Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/எந்நாளும் இன்பமே...

எந்நாளும் இன்பமே...

எந்நாளும் இன்பமே...

எந்நாளும் இன்பமே...

ADDED : மே 01, 2025 01:56 PM


Google News
Latest Tamil News
ராகு கேது பெயர்ச்சியால் நன்மையா... தீமையா... என்ற குழப்பம் வேண்டாம். நாகர்கள் வழிபாடு செய்த சிவன் கோயில்களை தரிசித்தால் எல்லா நலன்களையும் பெறலாம்.

தம்பதியர் ஒற்றுமைக்கு...

அரியலுார் மாவட்டம் திருமானுார் அருகே காமரசவல்லி என்னும் தலத்தில் உள்ள சிவனை வழிபட தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். நாகதோஷம் நீங்கும். முன்பு அர்ஜூனனின் பேரனான பரீட்சித்து மன்னன் வேட்டைக்கு சென்றார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் கழுத்தில் இறந்த நாகத்தை மாலையாக அணிவித்து பரிகாசம் செய்தான். இதை அறிந்த முனிவரின் மகன் சாபமிட, கார்கோடகன் என்னும் நாகம் கடித்து பரீட்சித்து இறந்தான்.

இதனால் இவரது மகன் ஜனமேஜெயன் தன் தந்தை இறக்க காரணமான நாகர்கள் இனத்தையே அழிக்க மாபெரும் யாகம் செய்தான். அதிலிருந்து தற்காத்துக் கொள்ள இத்தல சிவனை வழிபட்டு பிரயாச்சித்தம் தேடிக்கொண்டது கார்கோடக நாகம். அன்றில் இருந்து சுவாமியின் பெயர் கார்கோடக ஈஸ்வரர். அம்மனின் பெயர் பாலாம்பிகை.

கணவரான மன்மதன் தன் கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டுமென சிவனிடம் வரம் பெற்றாள் ரதி. அதனால் இத்தலத்திற்கு ரதிவரபுரம் என்னும் பெயர் ஏற்பட்டது. சுந்தரசோழனால் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

அரவெனும் ராகு ஐயனே போற்றி

கரவாது அருள்வாய் கடும் துயர் போக்கி

இறவா இன்பம் எதிலும் வெற்றி

ராகு தேவே இறைவா போற்றி!

பதவி பெற...

விரும்பிய பதவி வேண்டுமா... மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும் வழியில் இருக்கும் செம்பங்குடி தலத்திற்கு வாருங்கள். முன்பு பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் கொடுக்க நினைத்தார் திருமால். இதையறிந்த ஸ்வர்பானு என்ற அரக்கன் தேவ வடிவத்தில் அமர்ந்து அமிர்தத்தை சாப்பிட்டான்.

இதை அறிந்த சூரியனும் சந்திரனும் மோகினியிடம் காட்டிக்கொடுத்தனர். அமுதம் பரிமாறிய அகப்பையால் திருமால் வெட்டினார். தலை விழுந்த இடம் சிரபுரம் என்ற சீர்காழி என்றும், உடல் விழுந்த இடம் செம்பங்குடி (செம்பாம்பின் உடல் விழுந்த இடம் - செம்பாம்பின்குடி) என பெயர் பெற்றது. சிவனை நோக்கி தவம் செய்து மனித முகத்திற்கு நாக உடலும், நாக முகத்திற்கு மனித உடலும் கிடைக்கப்பெற்று ராகு, கேதுவாக கிரக பதவியை பெற்றனர்.

சுவாமியின் திருநாமம் நாகநாதர். அம்மனின் திருநாமம் கற்பூரவல்லி. ஆதி கேது, ஆதி ராகு தலமாக இது திருநாவுக்கரசு நாயனாரால் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்திற்கு வருவோருக்கு திருமணத்தடை, செயலில் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும்.

- தொடரும்

ஜெ.விஜயராகவன்

80560 41076





      Our Apps Available On




      Dinamalar

      Follow us