Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

ADDED : ஜூலை 06, 2018 10:13 AM


Google News
Latest Tamil News
சைவம் வைணவத்தின் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர் காஞ்சி மகாசுவாமிகள். திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரு பாடல்களையும் வேறுபாடு பாராட்டாமல் எல்லோரும் பாட வேண்டும் என்பது அவரது கொள்கை. பக்தர் ஒருவர் 'இந்த பாடல்களில் அப்படி என்ன விசேஷம் இருக்கு...சுவாமி?' எனக் கேட்டார்.

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று சொல்வார்கள். மாணிக்கவாசகர் என்னும் சிவனடியாரால் எழுதப்பட்டது திருவாசகம். பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் உள்ளது இது.

ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் பாடியது திருப்பாவை. திருமகளின் அவதாரமான இவள் ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச்செடியில் ஆடிப்பூரத்தன்று கண்டெடுக்கப்பட்டு பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டாள். தெய்வீகப் பெண்ணான இவள் ஸ்ரீரங்கநாதரையே திருமணம் புரிந்தாள்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி பாவை நோன்பு நோற்று இறைவனை வழிபடும் முறை பற்றி இரு நுால்களும் விரிவாக சொல்கின்றன. அனைவரும் செய்ய வேண்டிய மேலான தவம் பாவை நோன்பு.

அடியவர் தயங்கியபடி, ''சுவாமி... ஆனால், நடைமுறை வாழ்வில் சைவ, வைணவர்கள் ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாதது போல நடக்கிறார்களே...'' என்றார்.

சுவாமிகள் கலகலவென சிரித்து, ''இதெல்லாம் பிற்காலத்தில் வந்த பிரிவு தானே தவிர அந்த நாளில் இப்படி இருந்ததில்லை. விஷ்ணுவின் தங்கையே மீனாட்சி. மீனாட்சியை சிவன் பாண்டிய தேசமான மதுரையில் தானே திருமணம் செய்து கொண்டாள்... 'அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு!' என்று கூட பேச்சு வழக்கில் சொல்வதுண்டு.

கடவுளிடம் மட்டுமல்ல, உண்மையான அடியவர்களிடமும் இந்த பேதம் இருந்ததில்லை.

சிவனைப் பாடிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்' என ஆண்டாளின் முதல் எழுத்தான 'ஆ'வில் தொடங்குகிறது! திருமாலைப் பாடிய ஆண்டாளின் திருப்பாவை 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என மாணிக்கவாசகரின் முதல் எழுத்தான 'மா' வில் தொடங்குகிறது. இந்த அடிப்படையில் நாமும் அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டாமா?'' என்றார்.

மாணிக்கவாசகர், ஆண்டாள், காட்டிய வழியில் பக்தரும் 'ஆ...மா... சுவாமி... ஆமாம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us