Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தேடினேன்... வந்தது! தோண்டினேன்... நின்றது!

தேடினேன்... வந்தது! தோண்டினேன்... நின்றது!

தேடினேன்... வந்தது! தோண்டினேன்... நின்றது!

தேடினேன்... வந்தது! தோண்டினேன்... நின்றது!

ADDED : ஏப் 09, 2023 01:16 PM


Google News
Latest Tamil News
1927ல் கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள வடவாம்பலம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அந்த ஊருக்கும், காஞ்சி மடத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1638ல் காஞ்சி காமகோடி மடத்தின் 58வது பீடாதிபதி ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமேஸ்வர யாத்திரை முடித்து காஞ்சிபுரம் திரும்பும் வழியில் வடவாம்பலத்தில் ஸித்தி அடைந்தார். அவரது திருமேனி அங்கேயே அடக்கம் செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. இது தென்பெண்ணை ஆற்றின் கரையில் இருந்ததால் வெள்ளப்பெருக்கால் காலப்போக்கில் அடையாளம் இன்றி மறைந்தது.

1927ல் இப்பகுதிக்கு வந்த காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமாதி இருந்ததன் அடையாளம் இங்கிருக்கிறதா என ஊராரிடம் விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. சீடர்களுடன் காடு மேடெல்லாம் மஹாபெரியவர் தேடிப் புறப்பட்டார். குறிப்பிட்ட இடத்தில் இருந்த கரும்பு தோட்டத்தைச் சுற்றிய மஹாபெரியவர் அங்கிருந்த கிணற்றடியை காட்டி, 'இங்கு தோண்டுங்கள்' எனத் தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் சமாதிக்கான அறிகுறி இல்லையே என்றனர். ஆனாலும் தன்னுடன் இருந்த குமாரமங்கலம் சாம்ப மூர்த்தி என்பவரிடம் மண்வெட்டியை கொடுத்து தோண்டும்படி கூறினார் மஹாபெரியவர். வேடிக்கை பார்த்தபடி மக்கள் சுற்றி நின்றனர்.

சாம்பமூர்த்தி குறிப்பிட்ட ஆழம் தோண்டிய பின் திடீரென ஆவேசம் வந்தவராக ''சதாசிவம், சதாசிவம்'' எனக் கத்தியபடி மயங்கி விழுந்தார். முகத்தில் நீர் தெளிக்க மயக்கம் தெளிந்த அவர், மண்ணை அகழ்ந்த பள்ளத்தில் திடீரென துறவி ஒருவரின் உருவம் வெளிப்பட்டதாகவும், அது விஸ்வரூபமாகி 'சதாசிவம், சதாசிவம்' என ஜபித்தபடி நின்றதைக் கண்டு மயக்கம் அடைந்ததாகவும் கூறினார்.

''இதுதான் சமாதி இருந்த இடம். இந்த இடத்தை சுத்தப்படுத்துங்கள்'' என மஹாபெரியவர் தெரிவிக்க மக்களும் செய்தனர். கரும்பு தோட்டத்தை மடத்திற்கு விலைக்கு வாங்க ஏற்பாடு செய்தார். மீண்டும் சமாதி கட்டப்பட்டது. மஹாபெரியவரின் ஞான திருஷ்டிக்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us