Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நவராத்திரி பூஜை செய்! நல்லதே நடக்கும்!

நவராத்திரி பூஜை செய்! நல்லதே நடக்கும்!

நவராத்திரி பூஜை செய்! நல்லதே நடக்கும்!

நவராத்திரி பூஜை செய்! நல்லதே நடக்கும்!

ADDED : அக் 13, 2023 03:10 PM


Google News
Latest Tamil News
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் முகாமிட்டிருந்த காஞ்சி மஹாபெரியவர் முன் இளைஞர் ஒருவர் கலக்கமுடன், ''சுவாமி! பாலக்காட்டிலிருந்து வந்திருக்கிறேன். என் வீட்டை ஜப்தி செய்யப் போகிறார்கள். அது என் முன்னோரின் சொத்து. என் தந்தை வீட்டை அடமானம் வைத்து பத்தாயிரம் வாங்கி, அதில் தன் தங்கையின் மகள்களின் திருமணத்தை நடத்தினார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை. இப்போது தந்தையார் காலமாகி விட்டார். வட்டியுடன் கடன் ஐம்பதாயிரம் ஆனது. வீடு ஜப்திக்கு வந்து விட்டது. தங்களை தரிசித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்தேன்.

''உன் பேர் என்ன? நீ யாருடைய மகன்?''

''என் பேர் ஹரிஹர சுப்பிரமணியன். என் அப்பா ஹரிஹர நாராயணன்''

''அடடே....ஆயுர்வேத வைத்திய பரம்பரையாச்சே... என்ன செய்கிறாய்?''

''எட்டாம் வகுப்பு படித்திருக்கிறேன். கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. குமாஸ்தா பணியில் எனக்கு சொற்ப வருமானம் தான். நவராத்திரி சமயத்தில் வீட்டை அடமானம் வைத்ததாலோ என்னவோ மகாலட்சுமி வீட்டை விட்டுப் போய்விட்டாள். சில ஆண்டுகளாக கொலு வைப்பதையும் நிறுத்தி விட்டேன்''

''அப்படி சொல்லாதே. தினமும் ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் படி. நவராத்திரியில் கொலு வைத்து பூஜை நடத்து. நல்லது நடக்கும்'' என்றார்.

''இளைஞர் நம்பிக்கையுடன் பாலக்காடு திரும்பினார். அந்த ஆண்டு கொலு அடுக்க பரணில் இருந்து பொம்மைப் பெட்டியை எடுத்த போது, முன்னோர் பாதுகாத்த ஆயுர்வேத சுவடிகள் அதில் இருந்தன. மறுபடியும் சதாரா சென்று மஹாபெரியவரிடம் அவற்றை சமர்ப்பித்தார்.

அப்போது அங்கிருந்த ஆயுர்வேத ஆராய்ச்சியாளர் ஒருவர், சுவடிகளைப் பார்வையிட்டு மகிழ்ந்தார். சன்மானமாக ஐம்பதாயிரம் கொடுத்து வாங்கிக் கொண்டார்.

''இந்தப் பணத்தில் வீட்டை மீட்கும் வழியைப் பார்'' என சுவாமிகள் ஆசிர்வதித்த போது இளைஞர் கண்களில் கண்ணீர். பக்தனின் வீட்டிலேயே மகாலட்சுமி குடியிருக்கிறாள் என்பது தானே நிஜம்!.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us