Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அன்னமிட்ட அன்பு நெஞ்சம்

அன்னமிட்ட அன்பு நெஞ்சம்

அன்னமிட்ட அன்பு நெஞ்சம்

அன்னமிட்ட அன்பு நெஞ்சம்

ADDED : மார் 27, 2023 08:16 AM


Google News
Latest Tamil News
1960ல் திருச்சியிலுள்ள பள்ளி ஒன்றில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அவர் அங்கு விஜயம் செய்து பல ஆண்டுகள் ஆனதால் தரிசிக்க மக்கள் அதிகம் வந்தனர். மைதானத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகக் குழுவினர் மேற்கொண்டிருந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சாப்பிடுவதால் உணவு பரிமாறுவது, குடிநீர் தருவது போன்றவை சவாலாக இருந்தன. இதற்கு மாற்றாக நாளை முதல் அதிகாலையில் சமைத்து, உணவை பொட்டலமாக கொடுத்தால் வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள் என்றனர்.

அதற்கு மஹாபெரியவர், ''ஆயிரக்கணக்கான மக்கள் வயிறார சாப்பிடுவதை பார்த்தாலே புண்ணியம். அதற்காக செலவழிப்பதும், உழைப்பதும் புண்ணியம் இல்லாமல் போகுமா... நல்லவன் ஒருவன் இங்கு சாப்பிட்டாலும் போதும்; தானத்திற்கான பலன் முழுமையாக கிடைக்கும். தேவைக்கு அதிகமாக உணவு வாங்கி சிலர் வீணாக்கலாம். அதை சாப்பிட எத்தனையோ உயிர்கள் வருகிறதே! அவற்றுக்கும் உணவளித்த புண்ணியம் சேருமே'' என்றார். மேலும், ''சாப்பிட்ட இலைகள் குவிவதால் பள்ளிக்கூடம் அசுத்தமாகிறது. துர்நாற்றம் அடிக்கிறது என்கிறீர்கள். சரி... பொட்டலமாக கொடுத்தால் ஊரெங்கும் இலைகளை வீசி எறிவார்களே... இப்போது பள்ளிக்கூடம் மட்டும் தான் பாதிப்படைகிறது. இல்லாவிட்டால் இந்த ஊரே பாதிக்காதா... நகராட்சிக்கு தகவல் சொல்லி பள்ளியை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள். முதல் பந்தியில் சாப்பிடுவோர் மாலையில் மீண்டும் சாப்பிட வருவதாகச் சொல்கிறீர்கள். பசியிருப்பதால் தானே அவர்கள் வருகிறார்கள். பசித்தவனுக்கே உணவைக் கொடு என்கிறது தர்ம சாஸ்திரம்'' என்றார். சுவாமிகளின் உபதேசம் கேட்ட அனைவரும் மனநிறைவுடன் மீண்டும் பணியில் ஈடுபட்டனர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us