Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வேண்டாமே கார்

வேண்டாமே கார்

வேண்டாமே கார்

வேண்டாமே கார்

ADDED : ஜூன் 27, 2024 12:22 PM


Google News
Latest Tamil News
காஞ்சி மஹாபெரியவர் கார் போன்ற வாகன வசதிகளை பயன்படுத்தியதில்லை. இதற்கான காரணத்தை அவரே சொல்கிறார் பாருங்கள்.

'ஒருமுறை மனுநீதிச்சோழனின் மகன் வீதியில் தேரில் வந்தான். எதிரில் கன்றுடன் ஒரு பசு வந்து கொண்டிருந்தது. வேகமாக வரும் தேரைக் கண்டதும் பசு ஒதுங்கியது. துரதிர்ஷ்டவசமாக கன்று தேர்க் காலில் சிக்கி இறந்தது' என சோழனின் வரலாறை நினைவுபடுத்திய மஹாபெரியவர், 'இதற்காகவே சக்கரம் வைத்த வண்டியில்(கார் போன்ற வாகனம்) பயணிக்க கூடாது எனத் தீர்மானித்தேன். இன்றைக்கு நடக்கும் பெரிய ஆபத்து எல்லாம் இது போன்ற வாகன பயணத்தால் ஏற்படுகின்றன.

வண்டியில் சென்றால் உயிர்களுக்கு ஹிம்சை செய்ய நேரிடும். ஜீவஹத்தி தோஷம்(கொலைப் பாவம்) ஏற்படும். ஒரு நாளில் எவ்வளவு தொலைவு நடக்க முடியுமோ அவ்வளவு துாரம் போனால் போச்சு. முடியாவிட்டால் இருந்த இடத்திலேயே இருக்கலாம்'' என தனக்குத் தானே ஒரு தீர்மானம் செய்ததாக சொல்கிறார்.

அந்த சோழனின் வரலாறில், கன்றை இழந்த பசுவானது கதறியபடி அரண்மனை மணியை அடித்தது. அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்துவது போலத்தான். அநீதிக்கு ஆளானவர்கள் அரண்மனை மணியை பிடித்திழுப்பார்கள். அநீதி இழைத்தது யார் என மன்னர் விசாரித்து தண்டனை அளிப்பார்.

இப்போது நீதியை நிலைநாட்ட நீதிமன்ற நடைமுறை உள்ளது. ஆனால் தீர்ப்பு கிடைப்பதற்குள் ஒருவரின் சொத்தே அழிந்து விடும். ஆனால் அந்தக் காலத்தில் மணியடித்தால் மன்னரே விசாரித்து தண்டனை கொடுப்பார். கன்றை இழந்த பசு மணியடிக்கவே மனுநீதிச் சோழன் விசாரித்தான்.

இளவரசனின் தேர்ச் சக்கரத்தில் சிக்கிய கன்று இறந்த செய்தியை அறிந்தான். தன் மகனுக்கு மனுநீதிச் சோழன் தண்டனை அளிக்க தயாரான போது சிவனே நேரில் காட்சியளித்து பிரச்னையை தீர்த்தார்' என்றார்.

குற்றவாளிகளை ஏன் தண்டிக்க வேண்டும் என்பது பற்றி காஞ்சி மஹாபெரியவர், 'தப்பு செய்தவனை நீதிபதி தண்டிக்காவிட்டால் குற்றவாளி மீண்டும் கெட்ட செயலில் ஈடுபடுவான். தண்டித்தால் தான் நாட்டில் தீமை குறையும். எனவே தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்' என்றார்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்

போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us