Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கண்ணை நம்பாதே

கண்ணை நம்பாதே

கண்ணை நம்பாதே

கண்ணை நம்பாதே

ADDED : ஜூன் 14, 2024 12:54 PM


Google News
Latest Tamil News
காஞ்சி மஹாபெரியவர் கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அவரைக் காண மக்கள் முண்டியடித்த நிலையில், வெளியூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர்.

அந்த இரு இளைஞர்களும் முகத்தில் அசதியும், கசங்கிய ஆடையுடன் காணப்பட்டனர். மஹாபெரியவரின் பார்வை அவர்களின் மீது பட்டது. அருகில் நின்ற டாக்டர் வெங்குடி ராமமூர்த்தியும் அவர்களைக் கவனித்தபடி இருந்தார்.

'அந்த இருவரையும் அழைத்து வா' என்றார் மஹாபெரியவர்.

இளைஞர்கள் பிரமித்தனர். இத்தனை சுலபமாக சுவாமிகளைச் சந்திக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

தன் அருகில் உட்காரச் சொல்லி வேதத்தின் சில பகுதிகளில் இருந்து சுவாமிகள் கேள்விகள் கேட்டார். அங்கிருந்த பண்டிதர்களே வியக்கும்படி பதில் கூறினர்.

பின்னர் வேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்லி அதைச் சொல்லச் சொன்னார்.

ஸ்வரம் பிசகாமல் ஏற்ற இறக்கமாக கணீரென சொன்னார்கள்.

உடனே டாக்டர் ராமமூர்த்தியிடம், 'கண்ணை நம்பாதே. ஒருவரின் தோற்றத்தை பார்த்து எடை போடாதே. தகுதியை அறியாமல் யாரையும் அலட்சியமாக நினைக்காதே' என்றார் மஹாபெரியவர்.

எப்பேர்ப்பட்ட உபதேசம்!

பலர் அப்படித்தானே இருக்கிறோம். ஒருவரைப் பார்த்ததும் 'அவன் இப்படி... இவன் அப்படி' என வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என நினைக்கிறோம்.

பிரமிப்புடன் பார்த்தார் டாக்டர்.

'இங்கிருந்து உங்கள் ஊர் எவ்வளவு தொலைவு?' என இளைஞர்களிடம் கேட்டார் சுவாமிகள்

'30 கி.மீ.,'

'எப்படி வந்தீர்கள்?'

'நடந்து வந்தோம்'

' நடந்து வர ஆறு மணி நேரம் ஆகி இருக்குமே. வேகாத வெயில்ல விறுவிறுன்னு நடந்து வந்தா புழுதியும், அழுக்கும் உடம்பில் சேரத்தானே செய்யும்?' என்ற மஹாபெரியவர் மடத்தின் சிப்பந்தி ஒருவரிடம், 'இருவருக்கும் வஸ்திரம், சம்பாவனை(பணம்) கொண்டு வா' என்றார்.

தங்களின் பெருமையை வெளிப்படுத்திய காஞ்சி மஹாபெரியவரை வணங்கினர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us