Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பொன்னான நாள்

பொன்னான நாள்

பொன்னான நாள்

பொன்னான நாள்

ADDED : மே 10, 2024 11:58 AM


Google News
Latest Tamil News
ஒருமுறை சொற்பொழிவுக்காக வெளிநாடு செல்ல இருந்தார் கிருபானந்த வாரியார். அதற்கு முன் மஹாபெரியவரிடம் ஆசி வாங்க காஞ்சிபுரம் வந்தார். சுவாமியின் முன்பு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். 'கைகளை உயர்த்திக் கும்பிட்டால் போதும்' என சைகை காட்டினார் மஹாபெரியவர்.

அதை ஏற்காமல், 'தெய்வங்கள், மகான்களின் சன்னதிகளை தரிசிக்கும் போது சாஷ்டாங்கமாகத்தான் நமஸ்கரிக்க வேண்டும்' என சொல்லியபடி வணங்க முற்பட்டார் வாரியார்.

அதற்கு மஹாபெரியவர், 'இடுப்பில் உள்ள துண்டை தரையில் விரித்து, அதன் மீது கழுத்தும் மார்பும் படாமல் நமஸ்கரியுங்கள்' என்றார்.

அதன்பின் ஒன்றல்ல... இரண்டல்ல... நான்கு முறை நமஸ்கரித்தார்.

அவரை அமரச் சொன்னார் மஹாபெரியவர்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

வாரியாரே முதலில் பேசத் தொடங்கினார்.

'தங்களை தரிசிக்கும் போதெல்லாம் நமஸ்காரம் செய்திருக்கிறேன். இன்று மட்டும் ஏன் இப்படி சொல்கிறீர்கள்' எனக் கேட்டார்.

'பக்தர்கள் அதிகம் இல்லாததால் இன்று உன்னிடம் சொல்ல முடிந்தது' என்றார் மஹாபெரியவர்.

'ஆமாம்... இன்று எனக்கு பாக்கியம். தங்களின் தரிசனம் ஆனந்தமாக இருக்கிறது' என்றார்.

அதற்கு மஹாபெரியவர் புன்னகைத்தார். பிறகு விளக்கம் அளித்தார். 'லிங்கமும், ருத்திராட்சமும் பூமியில் படக் கூடாது என்பதால் 'பாவனையாகக் கைகளால் நமஸ்கரித்தால் போதும்' என்றேன்'

இதைக் கேட்டவுடன் 'இன்று ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொண்டேன். இது ஒரு பொன்னான நாள்' என கைகளை உயர்த்தி கும்பிட்டார் வாரியார்.

'லிங்கமும் ருத்திராட்சமும் மட்டுமல்ல... இன்னும் சில பொருட்கள் பூமியில் நேரடியாகப் படக் கூடாது. தங்கம், சங்கு, விபூதி, வெற்றிலை ஆகியவற்றை தரையில் வைக்கும் போது பூமியின் மீது நேரடியாகப் படும்படி வைக்கக் கூடாது.

அதற்கு காரணம் தங்கமும் வெற்றிலையும் மகாலட்சுமியின் அம்சம். விபூதியை ஐஸ்வர்யம் என்பார்கள். சங்கு மகாவிஷ்ணுவின் அம்சம்' எனச் சொல்லி விட்டு வாரியாரின் முகத்தை பார்த்தார் மஹாபெரியவர். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us