Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மகாவிஷ்ணுவின் சந்தேகம்

மகாவிஷ்ணுவின் சந்தேகம்

மகாவிஷ்ணுவின் சந்தேகம்

மகாவிஷ்ணுவின் சந்தேகம்

ADDED : டிச 19, 2024 03:01 PM


Google News
Latest Tamil News
மகாவிஷ்ணு தன் வாகனமான கருடனிடம், ''உலகில் எத்தனை வகை மனிதர்கள் இருக்கிறார்கள் தெரியுமா'' என சந்தேகம் கேட்டார்.

''மூன்று விதம் '' என்றார் கருடன் '' இத்தனை கோடி மக்கள் வாழும் பூலோகத்தில் மூன்று விதமாகத் தான் இருக்கிறார்களா...என்ன?'' எனக் கேட்டார்.

''ஒன்றும் அறியாதது போல தாங்கள் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது சுவாமி''

''சரி... அந்த மூன்றையும் சொல்'' என்றார்.

''சுவாமி... பறவையும் அதன் குஞ்சுகளும் போல வாழ்பவர்கள் முதல் வகை. பசுவும் அதன் கன்றுமாக வாழ்பவர்கள் இரண்டாம் வகை. கணவன், மனைவியைப் போல் வாழ்பவர்கள் மூன்றாம் வகை'' என்றார்.

''கருடா... விளக்கமாகச் சொல்'' என்றார்.

''சுவாமி... பறவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளுக்காக பகலில் இரை தேடிச் செல்லும். தாய்ப்பறவை வருவதற்குள் பாம்புகளும், மற்ற பறவைகளும் குஞ்சுகளை தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும். மாலையில் கூட்டுக்கு வரும் தாய் காணாமல் போன குஞ்சுகளுக்காக பெரிதாக கவலைப்படாது. கூட்டில் இருக்கும் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டும். அவற்றுக்கும் பசிக்கான இரை தான் தெரியுமே தவிர, தாயைப் பற்றிய சிந்தனை வராது. வளர்ந்ததும் குஞ்சுகள் பறக்க முயற்சி செய்யும். அப்போது மரத்தில் இருந்து கீழே விழுந்து மடிந்தது போக மற்றவை உயிர் வாழும். அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் தான் வறுமையுடன் போராடுகின்றனர். கிடைத்த வருமானத்தில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு கடவுள் பற்றிய சிந்தனை இருப்பதில்லை.

இரை தேடும் மனிதர்களாக வாழ்க்கை நகரும். பசுவும் கன்றும் எப்படியென்றால்...தொழுவத்தில் பசு ஓரிடத்திலும், கன்று ஓரிடத்திலும் கட்டப்பட்டிருக்கும். பசுவைப் பார்த்து கன்றும், கன்றினைப் பார்த்து பசுவும் சப்தமிடும்.

தாயின் மடியில் சுரக்கும் பாலைக் குடித்தால் பசி அடங்கும் என்பது கன்றுக்கும் தெரியும். ஆனால் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு தடுக்கும். கயிறை இழுத்துப் பார்த்து ஏங்கும். இது போல இரண்டாம் வகையினருக்கு கடவுள் சிந்தனை இருக்கும். அவரை அடைந்தால் வாழ்வு சுகம் பெறும் என்பதும் புரியும். ஆனால் குடும்பம், உறவு, பாசம் ஆசை என்னும் கயிற்றில் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.

மூன்றாவது வகையினர் கணவன், மனைவி போன்றவர்கள். எப்படியென்றால்... முன்பின் அறியாத பெண்ணை திருமணம் புரிந்த கணவன் முகம் கொடுத்து பேசாமல் ஒதுங்கிச் செல்வான். ஆனால் அவளோ கணவரைப் பார்த்த நாளில் இருந்து அவனுக்காக வாழத் தொடங்குவாள். கணவருக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரிப்பாள். பிடித்ததை சமைப்பாள். அவனுக்காகவே பிறந்தவள் என்பதை உணர்த்தி கணவரைத் தன் பக்கம் கவர்ந்திழுப்பாள்.

முதலில் விலகிச் செல்ல நினைத்தவன், நாளடைவில் மனைவியின் அன்பில் கரைவான். அவளை விட்டு பிரிய மனம் இருக்காது. மூன்றாம் வகையினர் எப்போதும் பக்தியில் ஈடுபடுவர். சோதனையால் முதலில் வருந்தினாலும் கடைசியில் அவர்கள் கடவுளை அடைவர்'' என்றார்.

மதிநுட்பம் மிக்க கருடனின் விளக்கம் கேட்ட மகாவிஷ்ணு மகிழ்ந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us