Dinamalar-Logo
Dinamalar Logo


குகன்

குகன்

குகன்

ADDED : ஆக 30, 2024 10:58 AM


Google News
கங்கைக்கரையில் முனிவர் ஒருவரும், அவரது மகனும் ஒரு குடிசையில் வாழ்ந்தனர். தந்தையிடம் வேத மந்திரம் கற்ற அவன் 'வேதம் போற்றும் கடவுள் யார்?' எனக் கேட்டான்.

'முருகப்பெருமான் தான்! அவரை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். அதனால் முருகனை வழிபடு' என்றார்.

ஒரு சமயம் முனிவர் வெளியூர் சென்ற நேரத்தில் மன்னர் ஒருவர் வந்தார். முகம் வாடியிருந்த அவர், 'தம்பி! முனிவர் இருக்கிறாரா?' எனக் கேட்டார்.

''நீங்கள் யார்? என்ன விஷயமாக வந்தீர்கள்? அப்பா ஊரில் இல்லையே!'' என்றான் சிறுவன்.

'' எங்கு போனாலும் விதி என்னை துரத்துகிறதே!. உன்னிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது! நாளை மாலை வருகிறேன்'' என தேரில் ஏறப் போனார்.

சிறுவன் தடுத்து, ''மன்னா! உதவி செய்வதற்கு பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. விளக்குடன் இருண்ட அறைக்குள் பெரியவர் சென்றாலும், சிறியவர் சென்றாலும் வெளிச்சம் பரவி விடும்! எனவே வந்த விஷயத்தை சொல்லுங்கள். தீர்வு சொல்கிறேன்'' என்றான்.

அவனது பேச்சு மன்னரைக் கவர்ந்தது.

'தம்பி! வேட்டையாட அம்பைத் தொடுத்தேன். அது குறி தவறி ஒரு முனிவர் மீது பாய்ந்தது. இப்போதோ அவரைக் கொன்ற பாவம் துரத்துகிறது. அதற்கு பரிகாரம் சொல்வாயா'' என்றார். '' கங்கையில் வடக்கு நோக்கி மூழ்கி எழுந்து மூன்று முறை 'முருகா' என சொல்லுங்கள். பாவம் ஓடி விடும்'' என்றான். மன்னரும் அதைச் செய்ய பாவம் விலகியது.

மறுநாள் முனிவர் வந்தார். வாசலில் தேர் வந்து சென்ற தடம் இருந்தது. நடந்ததைக் கேட்டு அறிந்த முனிவருக்கு கோபம் வந்தது.

''உன்னைப் போய் மகனாகப் பெற்றேனே! ஒருமுறை 'முருகா' என்றாலே ஆயிரம் பிரம்மஹத்தி தோஷம் போகுமே! நீ மூன்று முறை சொல்ல வைத்து, மந்திரத்தின் பெருமையைக் குறைத்து விட்டாயே! அடுத்த பிறவியில் பூலோகத்தில் வேடனாகப் பிறக்க கடவது'' எனச் சபித்தார். சிறுவன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டான்.

''என் சாபம் பலித்தே தீரும். முருகனின் திருநாமங்களில் ஒன்றான 'குகன்' என்னும் பெயரில் வேடனாகப் பிறப்பாய். ராமருக்கு தொண்டு செய்வாய்'' என்றார். இவனே மறுபிறவியில் கங்கைக்கரையில் வேடன் குகனாகப் பிறந்தான்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us