Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நான் இருக்கேன்

நான் இருக்கேன்

நான் இருக்கேன்

நான் இருக்கேன்

ADDED : மே 01, 2025 01:51 PM


Google News
Latest Tamil News
காஞ்சி மஹாபெரியவரின் தொண்டராக பணியாற்றியவர் பாடசாலை வெங்கட்ராம ஐயர். முதுமை காலத்தில் இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். நாளடைவில் படுத்த படுக்கையான அவருக்கு இடது காலை எடுக்கும் நிலை ஏற்பட்டது.

மஹாபெரியவர் காசி யாத்திரை சென்ற போது அவருடன் நடந்தே சென்றவர் இவர். இவரது மகளான லலிதா தீர்வு வேண்டி மடத்திற்குச் சென்றார். சுவாமிகளின் முன்பு கண் கலங்க நின்றார். அப்போது மனதிற்குள், 'உங்க மனசு என்ன கல்லா... நான் படுற பாட்டை பார்க்கக் கூடாதா... உங்களுக்காக ஓடியாடிய என் அப்பாவுக்கு நீங்கதான் அருள்புரியணும்' என அழுதார். சுவாமிகள் வலது கையை உயர்த்தி ஆசியளித்தார். 'கவலைப்படாதே...நான் இருக்கேன்' என்பதை உணர்ந்த லலிதா நெகிழ்ச்சி அடைந்தார்.

மறுநாள் மருத்துவமனைக்கு தந்தையும், மகளும் சென்ற போது மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

'இன்னைக்கு எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் ரொம்ப ஆச்சரியத்தை உண்டாக்குது. இவரோட காலில் பல்ஸ் ஓடுறது. துடிப்பு நல்லா இருக்கு. அதனால காலை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது' என்றனர்.

இதே மருத்துவர்கள் தான் 'உயிர் பிழைக்க வேண்டுமானால் காலை எடுத்தே ஆக வேண்டும்' என கடந்த இரண்டு மாதமாக வலியுறுத்தினர். ஆனால் மஹாபெரியவரின் தீர்மானம் தான் கடைசியில் நிறைவேறியது.

மறுவாரத்தில் நன்றி சொல்வதற்காக லலிதா காஞ்சிபுரம் சென்றார். அப்போது மஹாபெரியவர் ஜாடையாக, 'மனசுல இவ வேண்டிண்டு இருக்கா... அது அப்படியே பலிச்சுடுத்தாம்' என அருகில் நின்ற தொண்டர்களிடம் கூறினார். பிறகு லலிதாவை பார்த்து, 'கல்லான்னு கேட்டியே... கல்லாத்தான் இருந்தேன். ஆனா... அழுதியோ இல்லியோ... அதில மனசு கரைஞ்சு போயிட்டேன்' என்றார் சிரிப்புடன். உருக்கமான பிரார்த்தனைக்கு உடனடி பலன் கிடைக்கும் என்பது நிஜம் தானே...

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.

* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று; உன் கஷ்டம் தீரும்.

* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.

* உன் முன்னோரை காப்பாற்றிய குலதெய்வம் உன்னையும் காக்கும்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com






      Our Apps Available On




      Dinamalar

      Follow us