Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கலங்காதே... கரை சேர்ப்பேன்

கலங்காதே... கரை சேர்ப்பேன்

கலங்காதே... கரை சேர்ப்பேன்

கலங்காதே... கரை சேர்ப்பேன்

ADDED : அக் 04, 2024 08:48 AM


Google News
Latest Tamil News
காஞ்சி மஹாபெரியவருக்கு ஆரத்தி காட்ட விரும்பினார் பக்தை ஒருவர். அதற்காக பித்தளை தட்டு ஒன்றில் கற்பூரம் ஏற்றி சுவாமிகளுக்கு அருகில் வந்த போது மஹாபெரியவரின் கால்கள் யானைக்கால் போல வீங்கி இருப்பதைக் கண்டார். 'பக்தர்களின் நோய்களைப் போக்கும் குருநாதரின் கால்கள் இப்படி வீங்கியிருக்கே...' எனக் கலங்கினார்.

புன்னகைத்த சுவாமிகள், 'கலங்காதே' என்றார்.

அவள் என்ன நினைக்கிறாள் என்று மகானுக்குத் தெரியாதா...

கன்னத்தில் கண்ணீர் வழிய, ''என் மனம் வேதனைப்படுகிறது. சிகிச்சை எடுத்துக்க கூடாதா பெரியவா'' எனக் கேட்டாள்.

''நீ இப்போ காமாட்சி அம்மனை தரிசனம் பண்ணி விட்டு மடத்துக்கு வா'' என சொல்லி அனுப்பினார். கண்ணீரை துடைத்தபடி அவளும் புறப்பட்டாள்.

அதன்பின் பத்மாசனத்தில் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார் மஹாபெரியவர்.

அவ்வளவு தான் மடமே அமைதியானது. அருகில் நின்ற தொண்டர்கள் ஓரமாகப் போய் அமர்ந்தனர். ஒரு மணி நேரம் கடந்தது. காமாட்சி அம்மன் கோயிலை தரிசித்து விட்டு அந்த பெண் மடத்திற்கு வந்து மஹாபெரியவரை வணங்கினாள்.

தியானம் கலைந்து கண்களைத் திறந்த சுவாமிகள் கால்களை நீட்டி, ''இதோ பார் என் கால்களை...'' என்றார். வீக்கம் இன்றி கால்கள் இருந்தன. ஆனந்தக் கண்ணீருடன் அவள் மீண்டும் வணங்கினாள்.

நம் மனம், உடல் நோய்களை அகற்ற வந்த புனிதப்பிறவி அவர். பக்தர் ஒருவரின் வேதனையை போக்க, அவரது வலியை தானே சுமந்து காப்பாற்றி இருக்கிறார் என்ற உண்மை அவளுக்கு தெரியாதே...

'நோய், துன்பத்தில் இருந்து பக்தர்களைக் காப்பாற்றி கரை சேர்ப்பேன்' என இந்த சம்பவம் மூலம் சொல்லாமல் சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.



காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us