Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பகவத்கீதையும் திருக்குறளும் -- 21

பகவத்கீதையும் திருக்குறளும் -- 21

பகவத்கீதையும் திருக்குறளும் -- 21

பகவத்கீதையும் திருக்குறளும் -- 21

ADDED : அக் 04, 2024 08:52 AM


Google News
Latest Tamil News
வேண்டாமே 'நான்'

ஒருநாள் கந்தன் அழுதபடி, ''என்னோட படிக்கிற ரவி அழகான பேனா வச்சிருக்கான் தாத்தா. கொடுடா... பார்த்துட்டு தர்றேன்னு சொன்னேன். ஆனால் அவன் நீயோ ஏழை. இந்த மாதிரி பேனாவை எல்லாம் பார்க்கக் கூட உனக்கு தகுதி இல்லைன்னு சொல்லிட்டான். ஏன் தாத்தா... அதை பார்க்க எனக்கு தகுதி இல்லையா...'' எனக் கேட்டான்.

''விலை உசந்த பேனா என்னிடம் இருக்குன்னு ஆணவம் அவனிடம் இருக்கு. இன்றைக்கு அந்த பேனாவை வைச்சிருக்கான். நாளைக்கே அது உடைஞ்சு போச்சுன்னா துாக்கி போட்டாகணும். அப்ப அது அவனோடா பேனாவா இருக்குமா... இன்னைக்கு அது அவனுக்கு சொந்தமா இருக்கலாம். நாளைக்கே குப்பைக்கு போயிடலாம். ஆனால் இதை புரிஞ்சுக்காம எந்த பொருளையும் என்னுடையது என்ற ஆணவத்துடன் மனிதர்கள் வாழ்றாங்க. பகவத் கீதையில் கிருஷ்ணர்

5ம் அத்தியாயம் 6ம் ஸ்லோகத்தில்

ஸந்ந்யாஸஸ்து மஹாபா³ஹோ து³:க²மாப்துமயோக³த:|

யோக³யுக்தோ முநிர்ப்³ரஹ்ம ந சிரேணாதி4க³ச்ச²தி ||5-6||

பெரிய தோள்களைக் கொண்ட அர்ஜூனா... மனம், புலன்கள், உடல் மூலம் நடக்கும் செயல்களை எல்லாம் 'நான் தான் செய்கிறேன்' என்ற எண்ணம் கொண்டவர்கள் துறவியாக முடியாது. விருப்பு, வெறுப்பு இல்லாதவர்கள் மட்டும் கடவுளை அடைவர்.

ஆணவக்காரனுனுக்கு துறவு கைகூடாது. அதாவது விருப்பும், வெறுப்பும் அவனை விட்டு விலகாது என்னும் இந்த கருத்தை 346ம் திருக்குறளில்

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்

என்கிறார் திருவள்ளுவர்.

உடம்பையே 'நான்' எனக் கருதுவதும், பொருட்களை எல்லாம் 'என்னுடையது' எனக் கருதுவதும் செருக்கு நிலையாகும். இதைக் கைவிட்டவன் தேவர்களாலும் அடைய முடியாத உயர்ந்த நிலையை அடைவான்.

நான், எனது என்னும் எண்ணங்கள் வராமல் மனதைக் காப்பது அவசியம்.



--தொடரும்

எல்.ராதிகா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us