Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அவதாரம் ஏன்

அவதாரம் ஏன்

அவதாரம் ஏன்

அவதாரம் ஏன்

ADDED : டிச 19, 2024 02:57 PM


Google News
Latest Tamil News
'பகவான் அவதாரத்துக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் தொடர்பு உண்டா?' இதைக் கேட்கும் போதே நம் புருவம் சுருங்குகிறது. ஆனால் காஞ்சி மஹாபெரியவரோ அருமையான விளக்கத்தை தருகிறார்.

'திருட்டு, கொலை, அடிதடி நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தனர். ஆனால் பாருங்கள்... திருட்டு நடந்து விட்டால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறோம்.

அதன் பிறகே வழக்கை போலீசார் கையில் எடுக்கின்றனர். அதுபோல் பகவானும் அவதாரம் நிகழ்த்த வேண்டும் என பூமிக்கு வருவதில்லை. யாராவது புகார் கொடுத்தால் தான் வருகிறார். அதாவது இரண்டு விதமான பெட்டிஷன்களை எதிர்பார்க்கிறார் அவர்.

மரியாதையை எதிர்பார்த்துக் கொண்டு இப்படி செய்கிறார் எனக் கருத வேண்டாம். எதிலும் ஒரு பத்ததி (முறை) வேண்டும் என்பதற்காக! இரண்டு விதமான பெட்டிஷன் என்றேனே... ஒன்று வானுலக தேவர்கள் கொடுக்கும் பெட்டிஷன். இந்த உலகத்தை இயக்கும் பொறுப்பாளர்களாக தேவர்களை வைத்திருக்கிறார் பகவான். அதாவது உலகை இயக்கும் அதிகாரிகள் இவர்கள்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். திடீரென உலகத்திற்கு பெரிய கஷ்டம் வருகிறது. அதனால் தர்மம் இல்லாமல் போகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பார்த்துக் கொண்டு தேவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். பகவானிடம் பெட்டிஷன் கொடுப்பார்கள்.

அந்த வழக்கைக் கையில் எடுத்து பகவான் ஆக் ஷனில் இறங்குவார். இன்னொரு வித பெட்டிஷன் என்ன தெரியுமா?

'பகவானே... நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்' என ஒரு தம்பதி பெட்டிஷன் கொடுத்தாலும் பகவான் வருவார். அந்த தம்பதியருக்கு அதற்கான தகுதி இருப்பது அவசியம். ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்ட பிறகே நடந்தன.

தசரத சக்கரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அதன் பின்னரே ராமராக அவதரித்தார் பகவான். கிருஷ்ண அவதாரத்திலும் இப்படித்தான். பல யுகங்களுக்கு முன் சுதபஸ், ப்ருச்னி என்னும் தம்பதியர் மகாவிஷ்ணு தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என தவமிருந்தனர். அதன்படி மறுபிறவியில் அவர்கள் வசுதேவர், தேவகியாக வாழ்ந்த போது கிருஷ்ணர் அவதரித்தார்.

பகவான் அவதாரத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் தொடர்புப்படுத்தி மஹாபெரியவரால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.

* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.

* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.

* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us