Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பல்லாண்டு

பல்லாண்டு

பல்லாண்டு

பல்லாண்டு

ADDED : செப் 20, 2024 10:28 AM


Google News
Latest Tamil News
பாண்டிய மன்னர் வல்லபதேவன் ஒருநாள் இரவு நகர சோதனைக்காக புறப்பட்டார். ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவரை எழுப்பிய மன்னர், 'நீர் யார்?' எனக் கேட்டார்.

''மன்னா! நான் ஒரு வழிப்போக்கன். கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, இப்போது சேதுக்கரையில் நீராடச் செல்கிறேன். இன்றிரவு இங்கு தங்கியிருக்கிறேன்'' என்றார்.

''பக்தரான நீங்கள் ஏதாவது பயனுள்ள ஸ்லோகம் ஒன்றைச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார் மன்னர்.

ஸ்லோகம் ஒன்றை சொல்லி அதற்கான பொருளையும் கூறினார் முதியவர்.

“இரவுக்கு தேவையானதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் தேட வேண்டும். அதைப் போல மறுமைக்கு (அடுத்த பிறவி) வேண்டியதை இம்மையில் (இப்பிறவி) தேட வேண்டும்'' என்றார்.

முதியவரை வணங்கிய மன்னர் அங்கிருந்து நகர்ந்தார்.

மனதிற்குள், “முதியவர் சொன்னபடி மறுமைக்கு வேண்டியதை இதுவரை நான் யோசிக்கவில்லையே'' என வருந்தினார் மன்னர்.

மறுநாள் காலையில் குலகுருவான செல்வ நம்பியை அழைத்தார்.

“மறுமையில் இன்பம் அடைய என்ன வழி?” எனக் கேட்டார்.

“மன்னா! கல்வியில் சிறந்த பண்டிதர்களை ஒன்று கூட்டினால் விடை கிடைக்கும்'' என்றார் செல்வநம்பி.

அதன்படி பண்டிதர்களுக்கு போட்டியும், பரிசும் அறிவிக்கப்பட்டது. சரியான விடை தருவோருக்கு சன்மானமாக அரண்மனை வாசலில் பொற்கிழி கட்டவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றினார். மன்னரின் சந்தேகத்தைப் போக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். 'யாமே பரம்பொருள்! எம்மை வழிபட்டால் மறுமை இன்பம் கிடைக்கும்' என்ற உண்மையை நிலைநாட்ட உத்தரவிட்டார்.

ஆழ்வாரும் 'நாராயணனே பரம்பொருள்' என்பதை வேதத்தின் அடிப்படையில் மன்னரிடம் நிரூபித்தார். அப்போது மூங்கில் கழி தானாக வளைந்து நின்றது. பொற்கிழியைப் பெற்ற ஆழ்வார் மகிழ்ந்தார். அப்போது கருடவாகனத்தில் காட்சியளித்தார் பெருமாள். மகிழ்ச்சியுடன் 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரத்தை பாடினார் பெரியாழ்வார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us