Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : டிச 06, 2019 10:59 AM


Google News
Latest Tamil News
* விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கலாமா?

கே.ருத்ரேஷ், மதுரை

அணிவிக்க கூடாது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பூ, செடி உள்ளது. அருகம்புல், எருக்கம்பூ மட்டுமே விநாயகருக்கு ஏற்றது.

* கோயிலில் கஜபூஜையை தரிசித்தால் நல்லதாமே...

பி.அபிகாஷினி, சென்னை

பசுவைப் போல யானையும் தெய்வாம்சம் கொண்டது. ஆண் யானையை

விநாயகராகவும், பெண் யானையை மகாலட்சுமியாகவும் வழிபடுவர். தெய்வங்களை நேரில் காண்பதற்கு நிகரான இந்த பூஜையில் பங்கேற்றால் நிம்மதி, லட்சுமி கடாட்சம், வெற்றி உண்டாகும்.

* இரட்டை வாழைப்பழத்தை பூஜைக்கு வைக்கலாமா....

எம்.அவந்திகா, ஊட்டி

இயல்புக்கு மாறானது என்பதால் பூஜைக்கு வைக்கக்கூடாது.

மன அமைதிக்கான மந்திரம் இருந்தால் சொல்லுங்கள்?

எஸ்.தான்விகா, கோவை

முதலில் அமைதியின்மைக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அமைதியைக் கெடுக்கும் எதிர்மறை விஷயங்களை மனதிற்குள் நுழைய விடாதீர்கள். இத்துடன் 'தந்தையும் தாயுமானான்...' எனத் தொடங்கும் தேவாரத்தை பாடினால் சிவனருளால் அமைதி கிடைக்கும்.

பூமிக்குள் புதைந்திருந்த சுவாமி சிலைக்கு சக்தி அதிகமா?

எஸ்.கிருத்திகா, விருதுநகர்.

கிடையாது. பல காலமாக பூஜையின்றி இருப்பதை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நல்லது.

அதற்கு முன் அரசிடம் அனுமதி பெறுவது அவசியம்.

* அர்ச்சகர், பூஜாரி என்பதன் பொருள் என்ன?

என்.தேஜாஸ்ரீ, புதுச்சேரி

கடவுளின் திருமேனியைத் தொட்டு பூஜை செய்யும் மரபினர் அர்ச்சகர்கள். 'அர்ச்ச' என்னும் சொல் பூஜையைக் குறிக்கும்.

இதன் அடிப்படையில் பூஜாரி என்பது நடைமுறையில் உள்ளது. அதுவே மருவி 'பூஜாரி' என்றானது. இரண்டுக்கும் பொருள் ஒன்றே.

வழிபாட்டில் அமாவாசை, பவுர்ணமியின் முக்கியத்துவம் என்ன?

டி.சாய்ஸ்ரீநிகா, கடலுார்

பவுர்ணமியின் மறுநாளான பிரதமை முதல் 15 நாட்கள் தேய்பிறை. 16 நாள் அமாவாசை. அந்நாளில் திதி, தர்ப்பணம் முன்னோர்களுக்கு செய்வர். அமாவாசையின் மறுநாள் பிரதமை துவங்கி 15 நாட்கள் வளர்பிறை. அதன் முடிவில் வரும் பவுர்ணமி அன்று, கிரி வலம், வழிபாடு செய்வது நன்று.

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?

கே.தனுஜா, காஞ்சிபுரம்

பகீரதன் என்ற மன்னரின் முன்னோர்கள், சாபம் ஒன்றின் காரணமாக மோட்சம் பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில், ''வானுலகில் ஓடும் கங்கையை பூமிக்கு வரவழைத்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்'' என்றார் அவரது குருநாதர். பகீரதனும் ஒற்றைக்காலில் விரலை ஊன்றியபடி தவம் புரிந்தார். மனமிரங்கிய சிவன் வானுலக கங்கையை பூமிக்கு இறங்கி வர பணித்தார். ஆணவத்துடன் சிவனின் தலையில் பாய்ந்தது கங்காநதி. அதை தன் ஜடைக்குள் அடக்கினார் சிவன். இதனால் பகீரதனின் எண்ணம் தடைபட்டது. மீண்டும் சிவனை வேண்ட, கங்கை வெளிவந்தது. அதன்பின் கங்கை 'ஜன்ஹு' என்னும் முனிவரின் ஆசிரமத்தை நாசப்படுத்தியது. முனிவர் 'ஜன்ஹு' தவசக்தியால் கங்கையை தன் வயிற்றில் அடக்கினார். மீண்டும் பகீரதன் எண்ணம் தடைப்பட்டது. தன் நிலையைச் சொல்லி உதவிட வேண்டினான் பகீரதன். முனிவரும் தன் காது வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அதன் பின் கங்கை இமயமலையிலிருந்து கீழிறங்கி பகீரதனின் முன்னோருக்கு பலன் அளித்தது. வற்றாத ஜீவநதியான இது மனித சக்திக்கு அப்பாற்பட்டு வானுலகில் இருந்து பூமிக்கு வந்தது பகீரதனின் விடாமுயற்சியால் தான். இதை 'பகீரதப் பிரயத்தனம்' என்கிறார்கள்.

அம்மனுக்கு சாத்திய எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்?

எம்.தீக் ஷா, சென்னை

தேங்காய், பழம் போல இதுவும் பிரசாதம் தான். சாறு பிழிந்து, நாட்டு வெல்லம் சேர்த்து எல்லோருக்கும் கொடுக்கலாம்.

இரவில் நெல்லிக்காய் சாப்பிடக் கூடாதா....

கே.ஹரிதா, திண்டுக்கல்

நெல்லிக்காய் குளிர்ச்சி மிக்கது. இதை பகலில் சாப்பிட்டால் அதன் சத்துக்கள் உடம்பில் சேர்வதோடு, நீர்ச்சத்து வியர்வையாக வெளியேறும். இரவில் சாப்பிட்டால் எதிர்மறை பலன் உண்டாகும்.

வீட்டு வாசலுக்குள் நின்றபடி பணம் பொருள் தரக் கூடாதாமே...

எம்.கிஷோர், திருத்தணி

பணம் என்பது வாழ்வின் ஆதாரம். வீட்டு வாசல் நிலையில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். எனவே நிலையை நடுவில் வைத்து, கொடுக்கல் வாங்கல் செய்வது, லட்சுமியை அவமதிப்பதாகும்.

சிலர் வீட்டு வாசலில் மணியைக் கட்டி காற்றில் ஒலிக்கச் செய்கிறார்களே..?

பி.சிவன்யா, திருப்பூர்

தீயசக்திகளை விரட்டி தெய்வசக்தியை வரவழைக்கும் ஆற்றல் மணியோசைக்கு இருக்கிறது. மணி ஒலிக்கும் இடத்தில் திருஷ்டி தோஷம் உண்டாகாது.

சகுனம் பார்ப்பது சரிதானா...எல்லா நேரமும் பார்க்கணுமா?

சி.முகேஷ், விருதுநகர்

முக்கிய பணி, வியாபாரம், சுபநிகழ்ச்சிகளுக்குச் சகுனம் பார்க்கலாம். மற்ற நேரத்தில் சகுனத்தை சிந்தித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

பாவம் தீர பரிகாரம் என்ன?

க.அகில், சாத்துார்

ராமநாமம் ஜபிப்பது பாவம் போக்கும். 'ரா' எனும் போது பாவம் வெளியேறி விடும். 'ம' எனும் போது உதடுகள் சேர்வதால் பாவம் தீண்டாது. தினமும் 'ஸ்ரீராம ஜெயம்' என 108 முறை சொல்வது அல்லது எழுதுவது நல்லது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us